Popular Posts

Popular Posts

Monday, March 12, 2012

பார்வைக்கும் இழப்பிற்குமிடையே ஒரு போட்டியா?

பார்வைக்கும்...இழப்புக்கும் இடையே.. ஒரு போட்டியா?
Mohana

SATURDAY, OCTOBER 15, 2011
சேலத்தில் பார்வை திறனற்றோருக்கு வாசிப்பு முகாம் –
பேராசிரியர் திருமதி மோகனா அவர்களின் கட்டுரை.

சேலத்தில் பார்வை திறனற்றோருக்கான வாசிப்பு முகாம் ஜுன் 8, 2011 ஆம் நாள் நடந்தது.  பேராசிரியர் திருமதி மோகனா அவர்களின் கட்டுரைகளை கொடுத்திருக்கிறோம்.


 பார்வைக்கும்...இழப்புக்கும் இடையே.. ஒரு போட்டியா?


2009LouisBrailleObva

     ஜூன் 13 ம் நாள் , 2011 ல் , சேலம் ஒரு புதிய விடியலை சந்தித்தது.  சேலம் நகர் செவ்வாய்ப் பேட்டை பகுதியில் ஒரு வித்தியாசமான பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடம் அரசினர் பார்வைத் திறனற்றோர் பள்ளி..! அங்கே என்னப்பா புதுவிதமான விஷயம் என்கிறீர்களா? இருக்கிறது நண்பா? அதுதான் பார்வைத் திறனற்றோருக்கான வாசிப்பு முகாம்..! என்னப்பா ரொம்பதான் கதை உடுறீங்க..! டுமீல் விடறதைக் கொஞ்சம் குறைச்சுக்குங்க என்கிறீர்களா? பார்வை உள்ளவர்களே, இந்த காலத்துலே பெரிசா ஒண்ணும் படிக்கிறதில்லே..! பார்வை இழந்தோருக்காக ஒரு வாசிப்பு முகாமா? நடக்கிற விஷயத்தைப் பேசுங்கப்பா  என்னும் நண்பர்களுக்கு பளார் என்று அறையும் தோரணையில் பதில் மொழி தந்தது..பார்வைத் திறனற்றோ ருக்கான வாசிப்பு முகாம்..! ஆம் நண்பர்களே, எனக்கு ஏராளமான  பார்வை உண்டு என்று பீற்றிக்கொள்ளும் மனிதர்களின் மேல் இந்த முகாம் ஒரு சாட்டையடிதான்..!

நேரம் தொடர்பான.. சரியான ..பார்வை..!

முகாமை பார்வைத் திறனற்றோர் தமிழக மேற்கு மண்டல சங்கமும், தமிழ் நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. ஜூன் 13 , காலை 9 .30 மணிக்கு முகாம் துவக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பக்கமிருந்து முகாமின் பொறுப்பாளர் திருமிகு பாலசரவணன் மற்றும்  மூவர் மட்டும் ஆஜர்.9 .30 க்கு...! ஆனால் 9 மணியிலிருந்தே, பார்வைத் திறனற்ற நண்பர்கள் வந்து கொண்டே இருந்தனர். இவர்கள் சேலம், நாமக்கல், கோவை, தருமபுரி மற்றும் வேலூர் மாவட்டங்களிலிருந்து பிரதிநிதிகள்அனைவரும் குறித்த நேரத்துக்குள் வந்துவிட்டனர். அது மட்டுமல்ல அதன் பின்னரே.. அறிவியல் இயக்க  நண்பர்கள் வந்தனர். எனவே முகாம் 10 மணிக்குதான் துவங்கப்பட்டது. இதில் இன்னொரு சுவையான தகவலும் அடங்கி இருக்கிறது..! அது என்ன தெரியுமா? பார்வைத் திறனற்றவர்கள் பக்கமிருந்து 20 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப் பட்டது..! ஆனால் முகாமுக்கு வந்ததோ 23 பேர்..!  இது எப்படி இருக்கு நண்பா ..!

மாற்றுக் கல்வி...தேடும்..பார்வை... வாசிப்பு..!

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் நடத்தும்  வாசிப்பு முகாம் என்பது, குழந்தைகளுக்கான மாற்றுக் கல்வியைப் பற்றி சிந்திப்பது? அது என்னப்பா மாற்றுக் கல்வி..? புதூஸா. நீங்க என்ன சொல்லிடப்  போறீங்க புள்ளங்களுக்கு   ? "அ" என்றால் அம்மா இல்லை அடுப்பு என்றா? அல்லது புத்தகத்தை வீசி எறிந்து விட்டு படிப்பு சொல்லித்தரப் போகிறீகளா? கிட்டததட்ட அப்படியும் என்று கூட பொருள் கொள்ளலாம்..!  இன்றைய கல்வி முறையில் அதனைப் பயிலும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் இல்லை..! ஆசிரியர் குழந்தைகளுடன் அனுசரணையாக இல்லை. ! அவர்களின் வாய் அன்புடன் பிஞ்சுகளுடன் உறவாடுவதில்லை.! உனக்குத் தெரியாது உட்கார் என்ற விடத்தைக் கொட்டுகின்றன. தெரியாத குழந்தைக்கு அவர்கள் மொழியில் புரிய வைக்க இன்றைய பாட திட்டமோ, ஆசிரியரோ எந்தவித கருவிகளையும், பயன்படுத்துவதில்லை, குழந்தைகளின் பிஞ்சு மனத்தை காயப்படுத்துவதைத் தவிர ..! உதடுகள்  பேசுவதைவிட பிரம்புகள் மலர்களிடம் பேசுவதே சில சமயம் அதிகமாக இருக்கிறது. மேலும் குழந்தைமைக்கான புரிதலுடன் பாடம் போதிக்கப்படுவதில்லை.அதனால்தான்,  வாசிப்பு முகாமுக்காக குழந்தைகளை மையப்படுத்திய புத்தகங்களான ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, பள்ளிக் கூட தேர்தல் என இரு புத்தகங்கள் தேர்வு செய்யப் பட்டன

 முன்னேற்பாடுடன்.. பங்கேற்பு..!

    முகாம் பங்கேற்பாளர்களுக்கு (பார்வைத் திறனற்றவர்களுக்குத்தான் ) முன்கூட்டியே என்னென்ன  புத்தகங்களை வாசிப்பு செய்யவேண்டும் என்ற தகவல்  தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த புத்தகங்களை பார்வை உள்ளவர்கள் மூலம் வாசிப்பு செய்து, அதனைப் பதிவு செய்த ஒலிப்பேழையும் அவர்களுக்கு முன்பே அனுப்பப்பட்டது.புத்தக வாசிப்பை பதிவு செய்ததும் அனுப்பியதும் நாமல்ல.அறிவியல் இயக்கமல்ல .! அவர்களில் ஒருவரான பேரா முருகேசன்தான்..! (பார்வையற்றோரில் பேராசிரியரா.. என புருவம் உயர்கிறதா வியப்பில்..! இன்னும் ஏராளமாய் இருக்கிறது நண்பா..  வியப்பில் மயக்கம் போட..!) இந்த பொறுப்புக்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு செவ்வனே தன்னார்வத்துடன் செய்தார்.  நமக்கு அனுப்பினால நம்மில் சிலபேர் படித்துவிட்டு வருவோம்.. சிலர் முகாம் செல்லும்போது படித்துக் கொள்ளலாம் என்று இருப்போம். வேறு சிலர், மற்றவர்கள் படித்துவிட்டு வருவார்களே அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்போம். இங்கு நடந்ததே.. வேறு கதை நண்பா..! நம்மில் பலர் இவர்களின் உலகத்தில் நுழைந்ததே இல்லை: நுழைய விருப்பப் பட்டதும் இல்லை..! முகாமுக்கு வந்த அனைத்து பார்வைத் திறனற்ற நண்பர்களும், புத்தகத்தை நன்கு படித்துவிட்டு,கலந்துரையாடலுக்கான கருத்துக்களைக் குறித்தும் கொண்டு, விவாதத்துக்கான முழு தயாரிப்புடன் வந்தனர்..!  முகாம் முடிவில்.. நாங்கள் மயக்கம் போட்டு விழாத குறைதான்..!

கல்வியும்.. பார்வைத்திறனும்..!

வந்திருந்த பார்வைத் திறனற்றோர் அனைவரின் குறைந்த பட்ச கல்வித்தகுதி... இளங்கலைப் பட்டமும்.. ஆசிரியருக்கான பட்டமும் ..(B.A., B.Ed ,) தான் ..! அனைவரும் ஆசிரியர்கள்..! மனிதத்தின் சரிபாதியானவர்கள், அதான்பா,,பெண்கள்.. வாசிப்பு முகாமில் 25% தான்..! 5 பெண்கள் வந்திருந்தனர். 6 பேர் கல்லூரி ஆசிரியர்கள்.. அதாவது..பார்வைத் திறனுள்ளவர்களுக்குப்  போதிக்கும் பார்வைத்திறன் இழந்த ஆசிரியர்கள்..! அது மட்டுமா? இருவர் முனைவர் பட்டம் பெற்றவர்கள்? ஒருவர் இசையில் முனைவர் பட்டம் வாங்கியவர். இருவர்.. கல்லூரி ஆசிரியர்களுக்கான தகுதி முறைத் தேர்வான SLET (State Eligibility Test) தேர்வில் தேறியவர்கள்..!   SLET ல் தேர்ச்சி பெறுவது எவ்வளவு கடினம் என்று அதற்காகத் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் பார்வைகளைக் கேட்டுப்பாருங்கள்..! உண்மையின் வடிவம் தெரியும்..!  இது எப்படி இருக்கு?

தெளிவான பார்வைத்/சிந்தனைத் திறன்..!

   பார்வைத் திறனற்ற ஆசிரியர்கள் தங்களுக்கான எழுது பொருள்களுடன்  வந்திருந்தனர்.அதாம்பா... பிரைலி எழுதும் பலகை, தாள் மற்றும் அடித்தட்டு. எழுது பலகையில் நம் விரல் துணுக்கு அளவில், ஓட்டைகள் உள்ளன. அதில் இடது பக்கம் மூன்று  ஓட்டைகளும், வலது புறம்  3 ஓட்டைகளும் உண்டு. இடது பக்கம் உள்ள மூன்று ஓட்டையில் முதல் பள்ளத்தை ஒரு குச்சி வைத்து அழுத்தினால், பேப்பரில் விழும் பதிவு "அ" என்பதைக் குறிக்கும். இடது பக்கம் மூன்றாவது ஓட்டை, வலது பக்கம் 4,5 என்ற ஓட்டைக்குள்     அழுத்தினால் அது "ஆ" என்பதைக் குறிக்கும்.இதனை பேரா. முருகேசன் எங்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.  நாங்கள் பேசும்போது வள்ளி மிக வேகமாக பிரைலியில் குறிப்பு எடுத்தார். மயக்கம் போடாத குறைதான், நமக்கும்..! மிக, மிக பிரமிப்பாய் இருந்தது.அவர்களின் செயல்..!.! பார்வை உள்ளவர்களே குறிப்பு எடுக்க சோம்பேறித்தனம் பட்டு பேசாமல் இருக்கும்போது, அவர்கள் செயல்படும் வேகத்தை இப்பூவுலகில் வர்ணிக்க, வார்த்தைகளே இல்லை.


louis-braille


tamil

வினவும் .. மாணவர்களுக்கு..பதில்  தேடி..!/பார்வையின் மறுபக்கம்..!

   வழக்கமாக அறிவியல் இயக்கத்தில் ஒரு கூட்டத்தில் வந்திருப்போரை நினைவில் கொள்ள, ஒரு சிறு வார்த்தை விளையாட்டு/சிந்தனை விளையாட்டுடந்தான் ஒருவரது அறிமுகம் நடக்கும். இங்கேயும் கூட, பேரா. முருகேசன் ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டார். அவர் வந்திருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு பேப்பரைத் தந்தார். அதில் பிரைலி மொழியில் ஒரு வினா தொடுக்கப்பட்டு இருந்தது..! அதன் அடியில் தமிழிலும் பிரையிலின் பொருள் எழுதப் பட்டு இருந்தது. அது ஆசிரியர்கள் தொடர்பான ஒரு கேள்வி..! ஒரு கேள்வி, பல கேள்வி, பலப்பல கேள்விகள் .. இதற்கு விடை தேடுவதுதானே.. இதுதானே ஆசிரியர் தொழிலின் அடிப்படை.!  அதற்கான பதிலுடன் அந்த ஆசிரியர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டும். எனக்கு வந்தவினா."உங்களிடம் மாணவன் தொடுக்கும் வினாவுக்கு, விடை தெரியவில்லை.. நீங்கள் என்ன செய்வீர்கள்?"  இப்படி அனைவருக்கும் ஒரு வினா..! பார்வையின் மாறுபட்ட கோணம் இது..!


வேதனையில் .. சாதனைப் ..படைத்து...!

    முகாம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. , பேரா. முருகேசனின் அறிமுகத்தில் இன்று புதிதாய்ப் பிறந்தோம் வாசிப்பு முகாமின் மூலமும் என கோடி காட்டினார். பின்  திருமிகு. தனிக்கோட்டியின் வரவேற்புடன் இனிமையான தென்றல் வீசத் துவங்கியது முகாமில்.  . .அவர்களில் பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.  அனைவரும் பேரா. முருகேசனின் வினாவுடன், அறிமுகம் செய்து கொண்டனர். அவர்களின் காயங்கள், வேதனைகள், சாதனைகள், திறமைகள், உயர்வு, போராட்டம் மற்றவர்களின் ஒதுக்கம், பாராமுகம்,  போன்றவையுடன் கலந்தே அனுபவம் வெளிப்பட்டது.பின். அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர், திருமிகு. சஹஸ்ரநாமம் அவர்களின் துவக்க உரையுடன், திருமிகு.பேரா.சோ.மோகனாவின் தலைமையுடன் முகாமின் விவாத  அரங்கம் களை கட்டியது.   பார்வை திறனற்ற ஆசிரியர்கள் தெளிவாக குழந்தைகளுக்கான இரண்டு புத்தகங்களையும் படித்து வந்திருந்தனர். விவாதம் சூடு பறக்க நிகழ்த்தினர். . கட்டிடம் தீப்பிடிக்கவில்லை என்பது மட்டும் உண்மை..!  இறுதியில் பேரா. ரமேஷ் குமார் சமச்சீர் கல்வி பற்றி மிகத் தெளிவாக அருமையாக உரைவீச்சு நிகழ்த்தினார். இவர் 5 புத்தகங்கள் எழுதி உள்ளார்.

முகாமின்.. தாக்கம்..மூளைக்குள்.. வேதி மாற்றம்

மதிய உணவுக்குப் பின் அனைவரும் தங்களின் கருத்தை அரங்கின் பார்வைக்கு முன் வைத்தனர். குழந்தைகளை ஒரு உயிராக மதிக்க, அவர்களின் உணர்வைப் புரிந்து கொள்ள தங்களில் மாற்றம் உண்டானதை  வெளிப்படுத்தினர். இதற்கு முன் பவானி சாகர், மற்றும் கெத்தேசால்  இரு முகாம்களில் கலந்து கொண்டதன் விளைவாக  பேரா. முருகேசன், பேரா. ரமேஷ் குமார் மற்றும் தனிக்கோட்டி தங்களுக்குள் உருவான வேதிவினை மாற்றம் பற்றி  கலந்துரையாடினர். குறிப்பாக, ஒரு ஆசிரியர் கோபமேலிட்டால் மாணவர்களை அடிப்பாராம்.இந்த முகாம் முடிந்து பள்ளி சென்றதும், அசெம்பிளியில் அனைவரின் முன்பும், இதுவரை தன் அடித்ததிற்கு மாணவர்களிடம் பகிங்கரமாக மன்னிப்பு கேட்டாராம்.!  பேரா. முருகேசன் தான் மாணவர்களை அடித்தால்  வீட்டுக்குச் சென்றதும் அதே போல தன்னை அடித்துப் பார்ப்பாராம் .! மனித நேயம் சொட்டிடும், நேச.. நிகழ்வு..!

நினைவும், உணர்வும்.. நிகழ்வும்.. வினையும்..!

மதிய இடைவேளையின்   போது , லட்சுமியும்  , அம்பிகாவும் இறங்கி வந்தனர்.    அவர்களிடம் எங்கே புறப்பட்டீர்கள் என்று கேட்ட போது, சும்மா பள்ளி வளாகத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு வருகிறோம் என்றனர். நமக்கு ஒரே இன்ப அதிர்ச்சி  ..! எப்படி.. எப்படி.. இது .. இந்த வார்த்தைகள் சாத்தியம்..! பார்வைத் திறனற்றவர்கள் இடத்தில் சுற்றுவதுடன், அவ்விடங்களைப் பார்க்கப்போவதாகவும் சொல்கின்றனர். என்ன ஒரு தன்னம்பிக்கை..! இருவரும் யாருடைய துணையும் இன்றி புதிய இடமாகிய பள்ளி வளாகத்துக்குள் ஒரு சுற்று சுற்றி வந்தனர். பார்வைத்திறனற்ற ஒருவருக்கு இயற்கையின் அழைப்பு..! துணைக்கு தன் இணைத்துணைத் தேடுகிறார். உடன் இருந்த ஒரு நண்பர் நான் வருகிறேன் எனக் கைப் பிடித்து கூட்டிச் செல்கிறார். ஆனால் அவர் பார்வைத் திறனற்ற நண்பரை.முதலில் தெரிந்த கழிப்பறைக்கு அதில் ஆண்   பெண்  என எழுதாததாலும் , அன்று  பள்ளிக்கு  விடுமுறை  என்பதாலும்   கூட்டிச் செல்கிறார் . பார்வைத்    திறனற்ற தனிக்கோட்டி தோழர்     நீங்க  தப்பானா  இடத்துக்கு  கூட்டிச் செல்கிறீர்கள் . இது நமக்கானது  இல்லை..! இங்கிருந்து  நேர   சென்று , இடது புறம் திரும்பிச்  சென்றால் , அங்கே  வலது பக்கம் மூன்று கழிப்பறைகளும் , இடது பக்கம் மூன்று கழிப்பறைகளும்  உள்ளன . இதில்  இடது பக்கம்தான் ஆண்களுக்கான  கழிப்பறை  என்றார் .கூடிச் சென்ற நண்பர் அவமானமாக உணர்ந்தார்..! நெஞ்சுக்குள் குறுகிப் போனார். ! அவர் உணரததை பார்வைத் திறனற்ற நண்பர் எப்படித் துல்லியமாக உணர்கிறார்..! இது எப்படி இருக்கு நண்பா? பார்வைத்திறனற்றவர்களின் மூளையும், உணர்வுகளும், மற்ற புலன்களும் நம்மைவிட மிகத் துல்லியமாய் பணி புரிகின்றன...! நாம்தான் அவர்களை பார்வை தெரியாதவர்கள் என அவர்களின் திறமையை, செயல்பாட்டைத் தவறாக அவர்களை எடைபோட்டு இருக்கிறோம் .! அதன் விளைவு அவர்களிடம் நம் நண்பர்கள்..மனசுக்குள்  அவமானப்பட்டோம் கூனிக் குறுகினோம்   என்றே கூறவேண்டும். ..! அது மட்டுமல்ல நண்பர்களே.. பார்வைத் திறனற்ற நண்பர்களின் பாதங்களை.. நன்கு கண் தெரிந்து  பார்வைத் திறன் மிகுந்த நண்பர்கள்தான்,,நசுக், நசுக் என பார்வையின் பிடி சிக்காமல் உலவித்  திரியும் நண்பர்களின் காலை மிதித்து சாரி கேட்டனர்..! இது எப்படிப்பா இருக்கு..! நம்ப    முடியாத 96 காரட் தங்க உண்மை இது..!


சமூக.. மாற்றத்திற்கான.. கல்வியின் பின்  ...!

   பின்னர் முகாம் பொறுப்பாளர் திருமிகு. பாலசரவணன் இன்னும் குழந்தைகள் தொடர்பாய் படிக்க வேண்டிய ஆசியரின் டைரி, முதல் ஆசிரியர், ஏன் டீச்சர் என்னைப் பெயிலாக்கிட்டியுங்க,பகல் கனவு Escape from childhood, & On education போன்ற   25 புத்தகங்களை பட்டியலிட்டு, அவற்றின் உள்ளடக்கம், கருத்து, தன்மை , ஆசிரியர் , அரங்கம் எனப் பல தகவல்களையும் பகிர்ந்து,  அனைவரையும் வாசிப்புக்குள் வசிக்க, ஈர்ப்புடன் அழைத்தார். நிறைவாக அனைவரும் பின்னூட்டத்தில் குழந்தைகளை அவர்களின் இயல்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் ; உடல், உள்ள வன்முறையின்றி போதிக்க வேண்டும்; மாணவன் படிக்காததிற்கோ , தவறு செய்வதற்கோ மாணவன் மட்டுமே காரணம் அல்ல ஆசிரியரும் அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர்.   பின்னர் இப்படிப்பட்ட முகாம் மூன்று திங்களுக்கு ஒரு முறையாவது நடத்தப் பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். எது எப்படியோ.. சமூக மாற்றத்திற்கான விதைகள் அந்த வாசிப்பு முகாமில் தூவப்பட்டதன் வினைவிளைவுகள், துல்லியமாக முளை விட்டதன் மூலம்  வெளிச்சம் அறிகுறி அப்போதே தெரிந்தது .!


இந்த பதிவை வெளியிட அனுமதி கொடுத்த பேராசிரியர் திருமதி மோகனா அவர்களுக்கு எங்களதுமனப்பூர்வ நன்றி.

இந்த பதிவை படித்து நிறை குறை எழுதுங்கள்.  Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் அடுத்தடுத்து பதிவு எழுதும் போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  நீங்கள் தொடர்ந்து படிக்க வசதியாக இருக்கும்.  தமிழ் மணத்தில் உங்களது ஓட்டை பதிவு செய்யுங்கள்.


மிக்க நன்றி.


Posted by Rathnavel Natarajan




-- 
WithCare&Regards,

Kannan. C

Skype: kankale63

No comments:

Post a Comment

Please leave your comments here to improve postings, information and quality.